சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே எஸ்.வையாபுரிபட்டியில் தமிழ்நாடு ஏறு தழுவுதல் நலச்சங்கம் சார்பாக முதலாம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. சிறைமீட்ட அய்யனார் கோயில் மார்கழி முதல் நாள் வழிபாடு முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தை கிராம முக்கியஸ்தர் ஆறுமுகம் தொடங்கி வைத்தார். திமுக ஒன்றிய செயலாளர் பூமிநாதன், ஏறுதழுவுதல் நலச்சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் மதுரை வீரன், ஒன்றிய துணைச் செயலாளர் அரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட மாட்டு வண்டிகள் வையாபுரி பட்டியிலிருந்து செல்லியம்பட்டி வரையிலான 7 கிலோ மீட்டர் தூரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில் மாடுகளை லாவகமாக ஓட்டி பள்ளப்பட்டி குணாநிதி, புலி பிரபாகரன் ஆகியோரது மாடு முதல் பரிசு பெற்றனர். மாம்பட்டி பாரிவள்ளல் இரண்டாம் பரிசும், கள்ளந்திரி ஐந்து கோவில் சாமி மூன்றாவது பரிசும், கீழவளவு சக்தி அம்பலம் நான்காவது பரிசும், சின்ன மாங்குளம் அழகு ஐந்தாவது பரிசும் பெற்றனர்.