×

காங். எம்எல்ஏ வலியுறுத்தல் கீழக்கரை அருகே கற்கால கோடாரி கண்டுபிடிப்பு

ராமநாதபுரம், ஜன.9: வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்களின் வரலாற்று தேடலில், கீழக்கரை அருகே நத்தத்தில் சங்ககால ஊர் இருந்த தடயத்தையும், புதிய கற்காலத்தை சேர்ந்த ஒரு கற்கோடாரியையும் கண்டுபிடித்துள்ளனர்.கீழக்கரை அருகே வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தை சேர்ந்த கவியரசன், விஷால், வினித், காளீஸ்வரன், யுவராஜ், அருள்தாஸ் ஆகிய 8ம் வகுப்பு மாணவர்கள் நத்தம், குலபதம் ஆகிய இரு ஊர்களுக்கு இடையில் உள்ள சுப்பாத்தா குளத்தின் மேற்குக்கரையில் கானத்திடலில் உள்ள ஒரு தோப்பில் பண்ணைக்குட்டை தோண்டிய இடத்தில் கற்கோடரியை கண்டெடுத்துள்ளனர். பின்னர் கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், இரும்புத் தாது, இரும்புத்துண்டு, அரைப்புக்கல், வட்டச்சில்லுகள், மான் கொம்பின் உடைந்த பகுதிகள், மணி செய்யும் கற்கள் ஆகியவற்றை கண்டெடுத்தனர். வரலாற்று தடயங்களை தேடிக் கண்டுபிடித்த இம்மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.இதுகுறித்து அந்த மாணவர்கள், மன்ற பொறுப்பாசிரியர், செல்வக்குமார், கணித ஆசிரியர் முனியசாமி ஆகியோரிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் ராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மை பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் ராஜகுருவுக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர் ஆய்வு செய்து கூறுகையில், இங்கு கிடைத்த கற்கோடாரி புதிய கற்காலத்தை சேர்ந்தது. இதன் நீளம் 5.8 செ.மீ. அகலம் 5.2 செ.மீ. கருங்கல்லால் ஆன இதை நன்கு தேய்த்து வழுவழுப்பாக்கி உள்ளனர். இதன் அகன்ற வெட்டும் பகுதியின் முனை மழுங்கியுள்ளது. இது சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது.புதிய கற்காலத்தில் பயன்பாட்டில் இருந்த இந்த கற்கோடாரியை சங்ககாலத்திலும் தொடர்ந்து பாதுகாத்து வந்திருக்கலாம். கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் கிடைப்பதன் மூலம் இவ்வூர் சங்ககாலத்தில் மக்கள் குடியிருப்பாக வைகை ஆற்றின் கரையில் அமைந்த ஒரு ஊராக இருந்துள்ளதை அறியமுடிகிறது. புதிய கற்கால கருவிகள் தென் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் மட்டுமே கிடைத்துள்ளன. சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் உள்ள கானத்திடல் பகுதி முழுவதும் பழமையான பானை ஓடுகள் காணப்படுகின்றன. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் போகலூரில் சங்ககால வாழ்விடப்பகுதியில் ஒரு கற்கோடரியை 2017ல் கண்டெடுத்துள்ளனர்.கானத்திடலின் மற்ற பகுதிகள் மேடாக உள்ளன. எனவே தொல்லியல் துறை இப்பகுதியில் அகழாய்வு செய்து கீழக்கரை பகுதியின் சங்ககால தொடர்பை வெளிக்கொணர வேண்டும். இம்மாணவர்கள் ஏற்கனவே மேலமடை, குலபதம் ஆகிய ஊர்களில் சீன நாட்டு பானை ஓடுகள், சேதுபதிகள் கால சூலக்கல் ஆகியவற்றை கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.

Tags : bottom ,MLA ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...