×

அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால் பூங்காவில் அமர்ந்து கோரிக்கை மனு பெற்ற நாகை எம்எல்ஏ

நாகப்பட்டினம், ஏப்.26: தேர்தல் நடத்தை விதிமுறையின் காரணமாக எம்எல்ஏ அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால் நாகப்பட்டினம் எம்எல்ஏ முகம்மது ஷாநவாஸ் பூங்காவில் அமர்ந்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது. இதனால் எம்எல்ஏ அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது. இதன்படி நாகப்பட்டினம் தம்பிதுரை பூங்கா அருகே அமைந்துள்ள எம்எல்ஏ அலுவலகமும் பூட்டப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் தான் தேர்தல் விதிமுறை வாபஸ் பெறப்படும். அதுவரை எம்எல்ஏ அலுவலகம் பூட்டப்பட்டு இருக்கும்.

இந்நிலையில் நேற்று நாகப்பட்டினம் எம்எல்ஏ முகம்மதுஷாநவாஸ் நாகப்பட்டினம் தம்பிதுரை பூங்காவிற்கு வந்தார். அவர் பொதுமக்களை சந்தித்து நாகப்பட்டினம் வளர்ச்சிக்கு தேவையான பிரச்னைகளை கேட்டார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் நாகப்பட்டினம் வளர்ச்சி பெற நிறைய கோரிக்கைகளை தெரிவித்தனர். அங்கு இருந்த ஒருசிலர் தங்களது கோரிக்கையை மனுவாக எழுதி கொடுக்கவும் தொடங்கினர். இதில் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்க வேண்டும். நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் முன்பு போல் மீண்டும் அவசர சிகிச்சை பிரிவு செயல்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை கொடுத்தனர். மனுவை பெற்ற எம்எல்ஏ முகம்மது ஷாநவாஸ் நடத்தை விதிமுறைக்கு பின்னர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

The post அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால் பூங்காவில் அமர்ந்து கோரிக்கை மனு பெற்ற நாகை எம்எல்ஏ appeared first on Dinakaran.

Tags : Nagai MLA ,Nagapattinam ,MLA ,Muhammad Shahnawaz ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து 13ம் தேதி...