திருவனந்தபுரம்: மலையாள மொழியில் குறைந்த பட்ஜெட்டில் தயாராகும் படங்களை வெளியிட ஓடிடி தளத்தை தொடங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது என்று கேரள கலாச்சாரத் துறை அமைச்சர் சஜி செரியான் கூறினார். கொரோனா பரவல் காரணமாக தற்போது நாடு முழுவதும் கடந்த பல மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் சினிமா தொழில் முடங்கிக் கிடக்கிறது. பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு முன் படப்பிடிப்பு முடிந்த ஏராளமான படங்களை திரையிட முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஏராளமான படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. இதற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால் நாளுக்குநாள் புதிது புதிதாக ஓடிடி தளங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. இந்த தளங்களில் தான் தற்போது பெரும்பாலான படங்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் மலையாள மொழியில் தயாராகும் படங்களை வெளியிட கேரள அரசே ஓடிடி தளத்தை தொடங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக கேரள கலாச்சாரத் துறை அமைச்சர் சஜி செரியான் கூறியுள்ளார். குறைந்த பட்ஜெட்டில் தயாராகும் கலைப் படங்கள் உள்பட சினிமாக்கள் இந்த தளத்தில் வெளியிடப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.