திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இடது முன்னணி சார்பில், முன்னாள் இஸ்ேரா விஞ்ஞானி நம்பி நாராயணனை போட்டியிட வைக்க முயற்சி கொள்ளப்பட்டு வருகிறது. திருவனந்தபுரத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் விஞ்ஞானியாக இருந்து ஓய்வு பெற்றவர் நம்பி நாராயணன். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இவர், இஸ்ரோவில் பணிபுரிந்து வந்தபோது வெளிநாட்டுக்கு விண்வெளி ஆய்வு ரகசியத்தை கடத்தியதாக கூறப்பட்ட வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டார். பல மாத சிறைவாசத்திற்கு பின்னர் நம்பி நாராயணன் விடுவிக்கப்பட்டார்.இந்த நிலையில் விண்வெளி ஆய்வு ரகசிய கடத்தலுக்கும், நம்பி நாராயணனுக்கும் எந்த தொடர்பு இல்லை என்று நீதிமன்றம் கூறியது. இதையடுத்து நம்பி நாராயணன், தன்னை வழக்கில் சிக்க வைத்த போலீசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரியும், நஷ்டஈடு கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் நம்பி நாராயணனுக்கு ₹50 லட்சம் நஷ்டஈடு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் பொய் வழக்கு ெதாடர்ந்தது தொடர்பாக ஒரு விசாரணை குழு அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நம்பி நாராயணனுக்கு கேரள அரசு ₹50 லட்சம் நஷ்டஈடு வழங்கியது. இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் நம்பி நாராயணனை இடது முன்னணி சார்பில் நிறுத்துவதற்கு தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுபற்றி தன்னிடம் யாரும் பேசவில்லை என்று நம்பி நாராயணன் கூறியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
