சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கின் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டுமென கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சியில் கடந்த 2019ம் ஆண்டு, கல்லூரி மாணவிகள், ஆசிரியைகள் உள்ளிட்ட பலரை பாலியல் கொடுமை செய்து அதனை வீடியோ படம் எடுத்த கும்பல் அந்த பெண்களை மிரட்டி பணம் பறித்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகள் எழுப்பியது. இதில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் பதிவு செய்த பாலியல் கொடுமை வழக்கில், திருநாவுக்கரசு, ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, பொள்ளாச்சி நகர அப்போதைய அதிமுக நகர மாணவரணிச் செயலாளர் அருளானந்தம், ஹேரேன் பால், பாபு என்கிற பைக் பாபு ஆகியோர் கைதாகியுள்ளனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் உள்ள நிலையில், அருளானந்தம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சீனிவாசன், ஏற்கனவே இந்த வழக்கில் கோவை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சில விளக்கங்களை நீதிமன்றம் கேட்டுள்ளது. சிபிஐயில் ஆட்கள் பற்றாக்குறையால் வழக்கு விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டார். அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ விரைந்து முடிக்க தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருப்பதாகவும், குறிப்பாக எஸ்.பி. அந்தஸ்திலான ஒரு அதிகாரியை நியமித்து உதவ தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட அருளானந்தம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிஐ விசாரிக்கும் வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றத்தில் செப்டம்பர் முதல் வாரம் விசாரணை தொடங்க உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. எனவே, அந்த வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து விசாரணையை 6 மாதத்தில் கோவை மகளிர் நீதிமன்றம் முடிக்க வேண்டும். சிபிஐ விசாரணைக்கு உதவும் வகையில் தமிழ்நாடு சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசி நியமிக்கப்படுகிறார். சிபிஐ ஆஜர்படுத்தும் சாட்சிகளுக்கான பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும்.பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் விவரங்களை ஊடகத்தினரிடம் விசாரணையின்போது வெளியிட்ட எஸ்.பி. அந்தஸ்தில் இருந்த முன்னாள் விசாரணை அதிகாரி உள்ளிட்ட காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களை இரையாக்கி தங்களை திருப்திபடுத்திக் கொள்ளும் இதுபோன்றவர்கள் மீதான வழக்குகளை பார்க்கும்போது ரத்தம் சிந்தி பெற்ற சுதந்திரம் வீணாகிவிட்டதா என எண்ண தோன்றுகிறது. இதுபோன்ற வழக்குகளில் விரைவான மற்றும் நியாயமான தீர்வை நீதிமன்றத்தால் வழங்குவதன் மூலம் பாதுகாப்பான சூழலில் இருப்பதை பொதுமக்கள் மனதில் விதைக்க முடியும். அதேநேரத்தில் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவோம் என்ற அச்சத்தை குற்றம்புரிவோர் மனதிலும் ஏற்படுத்த வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார்….
The post பொள்ளாச்சி பாலியல் வழக்கை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்: கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.
