×

மகள் போட்டோவை வெளியிடாதவருக்கு நன்றி தெரிவித்த நடிகை அனுஷ்கா சர்மா

புதுடெல்லி: இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராத் கோஹ்லி, கடந்த வாரம் தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்துக்காக மும்பை விமான  நிலையம் சென்றிருந்தார். அப்போது தனது மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா, மகள் வாமிகா ஆகியோரை அழைத்துச் சென்றார். அப்போது பத்திரிகை போட்டோகிராபர் ஒருவர், வாமிகாவை போட்டோ எடுத்தார். ஆனால், அந்த போட்டோவை இதுவரை அவர் வெளியிடவில்லை. இதுகுறித்து அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், ‘என் மகளின் போட்டோ மற்றும் வீடியோவை இதுவரை வெளியிடாத அந்த  பத்திரிகையாளருக்கும், ஊடகங்களுக்கும் மிகவும் நன்றி.

எங்கள் மகளை விளம்பர  வெளிச்சம் படாமல் வளர்க்க நினைக்கிறோம். அவள் நன்கு வளர்ந்த பிறகு தன்  விருப்பத்துக்குரியதை சுயமாக தேர்வு செய்யட்டும். தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்’ என்று கூறியுள்ளார். அனுஷ்கா சர்மாவுக்கு கடந்த ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து விராத் கோஹ்லியும், அனுஷ்கா சர்மாவும் தங்கள் மகளின் முகத்தை சமூக வலைத்தளங்கள் உள்பட எதிலும் வெளியிடாமல் ரகசியம் காத்து வருகின்றனர்.

Tags : Anushka Sharma ,
× RELATED டி20 உலக கோப்பையில் விராட் கோஹ்லி நீக்கமா?: முன்னாள் வீரர்கள் காட்டம்