×

மேகதாது அணையால் தமிழகத்துக்கே அதிக பலன்: டி.கே.சிவகுமார் சொல்கிறார்

பெங்களூரு: தமிழ்நாடு – கர்நாடகா இடையேயான காவிரி நீர் விவகாரம் பல ஆண்டு காலமாக நீடித்துவரும் நிலையில், கர்நாடக மாநில அரசு மேகதாது அணை கட்டுவதில் தீவிரம் காட்டிவருகிறது. ஆனால் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. மேகதாது அணை கட்ட ஒப்புதல் கேட்டு கர்நாடக அரசு ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்துவருகிறது. இந்நிலையில், மேகதாது அணை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார், மேகதாதுவில் அணை கட்டுவது கர்நாடகாவை விட தமிழ்நாட்டிற்கே அதிக உதவியாக இருக்கும். மேகதாது அணையில் நீரை தேக்கிவைப்பதன் மூலம் தமிழ்நாட்டிற்கு சரியான நேரத்தில் கர்நாடகாவால் நீர் திறந்துவிட முடியும். பெங்களூருவில் இருக்கும் கன்னடர்கள், தமிழர்கள், தெலுங்கர்கள் ஆகிய அனைவரும் இத்திட்டத்தின் மூலம் குடிநீர் பெற்று பயனடைவர்.

எனவே அவர்கள் அனைவரும் மேகதாது அணை திட்டத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். காவிரி விவகாரம் குறித்து நாங்கள் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டியதுபோல், தமிழ்நாட்டிலும் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது. அவர்கள் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், மேகதாது அணை தமிழ்நாட்டிற்கும் பயனளிக்கும் என்பதால், இத்திட்டத்திற்கு அவர்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும். கர்நாடகாவில் நல்ல மழை பெய்துவருவதால் தமிழ்நாட்டில் அதிக நீர் திறக்கப்படும் என்று டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

 

The post மேகதாது அணையால் தமிழகத்துக்கே அதிக பலன்: டி.கே.சிவகுமார் சொல்கிறார் appeared first on Dinakaran.

Tags : Meghadatu Dam ,Tamil ,Nadu ,DK Sivakumar ,Bengaluru ,Cauvery ,Karnataka ,Karnataka state government ,Tamil Nadu government ,Karnataka government ,Meghadatu ,TK Shivakumar ,Dinakaran ,
× RELATED மேகதாது விவகாரத்தில் நீதிமன்ற...