விளாத்திகுளம்: அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு இருந்ததால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ரெகுராமபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு 20 குழந்தைகள் வந்து செல்கின்றனர். அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வியாழன் ஆகிய 3 நாட்கள் முட்டை வழங்கப்படுகிறது. நேற்றுமுன்தினம் ஒரு வயதுடைய குழந்தையின் பெற்றோரிடம் அங்கன்வாடி ஊழியர், 3 முட்டைகளை வழங்கியுள்ளார். இந்த முட்டைகளில் ஒரு முட்டையை நேற்று குழந்தையின் பெற்றோர் உடைத்து பார்த்தபோது அதில் கோழிக்குஞ்சு இறந்து அழுகிப்போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து கோழிக்குஞ்சுடன் அழுகிய நிலையில் இருந்த முட்டையை அங்கன்வாடி மையத்திற்கு எடுத்துச் சென்று ஊழியரிடம் காண்பித்துள்ளனர். அதற்கு அவர், ‘’இந்த முட்டை எங்கு வாங்கியது’’ எனக்கேட்டு அலட்சியமாக பதில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், ‘’அங்கன்வாடி மையத்தை முறையாக பராமரிப்பது இல்லை. குழந்தைகளுக்கு எதுவும் சொல்லித் தருவதும் இல்லை. சாப்பாடு முறையாக சுத்தமாக வழங்குவது கிடையாது. முறையான குடிநீர் வசதி இல்லை. குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து பல மாதங்கள் ஆகிவிட்டது. சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் பழுதாகி கிடக்கிறது. மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விரிசல் விழுந்து காட்சியளிக்கும் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும்’’ என்றனர்.
