மூணாறு: கேரளம் மாநிலம், மூணாறு அருகே, மலையோர கிராமமான வட்டவடை ஊராட்சி உள்ளது. இப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு மூணாறில் இருந்து வாகனங்கள் மூலம் கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டர் சப்ளை செய்கின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் வட்டவடை ஊராட்சிக்கு உட்பட்ட பழத்தோட்டம், கோவிலூர், கொட்டாக்கம்பூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு குறைந்தளவு சிலிண்டர்களே விநியோகம் செய்யப்பட்டதாகவும், பாக்கி காலி சிலிண்டர்களே வாகனத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது கடும் தட்டுப்பாடு காரணமாக, முன்பதிவு செய்யாத ஏழை, எளிய மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்த ஏமாற்றத்துடன் திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வட்டவடை ஊராட்சி கிராம மக்கள் கூறுகையில், ‘மூணாறில் இருந்து கொண்டு வரப்படும் சிலிண்டர்கள், எங்கள் பகுதிக்கு வரும் முன்பே விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், கூடுதல் காலி சிலிண்டர்கள் மட்டுமே இங்கு கொண்டு வரப்படுகின்றன. முறையாக விநியோகம் செய்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, மலை கிராமங்களுக்குத் தேவையான எரிவாயு சிலிண்டர்கள் தங்கு தடையின்றி கிடைக்கவும், விநியோகத்தில் நிலவும் குளறுபடிகளைச் சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
