கன்னியாகுமரி, மார்ச் 20: கன்னியாகுமரி அருகே கொட்டாரம் நரிக்குளம் காலனியை சேர்ந்தவர் வேலப்பன். அவரது மனைவி மனோன்மணி (78). இந்த தம்பதிக்கு சுரேஷ் (47) என்ற மகன் உள்ளார். மனோன்மணி தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் மனோன்மணி தனக்கு தெரிந்த ஒருவரை பார்ப்பதற்காக நடந்து சென்றார். நரிக்குளம் காலனி பஸ் நிலைய ஜங்ஷன் பகுதியில் சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த கார் மனோன்மணி மீது மோதியது. இதில் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த மூதாட்டியை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மனோன்மணி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற கன்னியாகுமரி போலீசார் மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுரேஷ் கன்னியாகுமரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் காரை வேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதாக அகஸ்தீஸ்வரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த முருகன் மகன் நீலராஜன் (23) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
