- கெஜ்ரிவால்
- விடுதலை ஒன்றிய அரசு
- STBI
- சென்னை
- ஜனாதிபதி
- நெல்லி முபாரக்
- முதல் அமைச்சர்
- அரவிந்த் கெஜ்ரிவால்
- துணை
- மணீஷ் சீஸோடியா
- தில்லி
சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 21 பேரையும் விசாரணை நீதிமன்றம் முழுமையாக விடுவித்திருப்பது, வெறும் சட்ட ரீதியிலான வெற்றி மட்டுமல்ல; இது ஒன்றிய பாஜ அரசின் அரசியல் பழிவாங்கல் முகத்திரையை அப்பட்டமாகக் கிழித்தெறிந்திருக்கும் ஒரு அறச்சீற்றமாகும். ஒன்றிய புலனாய்வு அமைப்புகளான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை, சட்டத்தின் காவலர்களாகச் செயல்படுவதற்குப் பதிலாக, ஆளும் தரப்பின் ‘ஏவல் படைகளாக’ மாறி, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் கருவியாக உருவெடுத்திருப்பதை இந்தத் தீர்ப்பு தோலுரித்துக் காட்டியுள்ளது.
இந்த தீர்ப்பு ஒன்றிய விசாரணை அமைப்புகளுக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு கடும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது. போதிய ஆதாரங்கள் இன்றி அரசியல் அழுத்தங்களுக்காக வழக்குகளைப் பதிவு செய்வது, நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு நீதித்துறை மற்றும் புலனாய்வுத் துறை மீதுள்ள நம்பிக்கையையும் சீர்குலைக்கும். இந்த விடுதலையானது, விசாரணை அமைப்புகள் அரசியல் சார்பற்று, சட்டத்திற்கு உட்பட்டு இயங்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியுள்ளது. அதிகார பலத்தால் எதிர்க்குரல்களை ஒடுக்க நினைக்கும் ‘சர்வாதிகாரப் போக்கிற்கு’ இந்த தீர்ப்பு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
