×

பொன்னமராவதி அம்மன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு; 800 காளைகள் சீறிப்பாய்ந்தன

பொன்னமராவதி: பொன்னமராவதி அடுத்த அம்மன்குறிச்சியில் நடந்த ஜல்லிக்கட்டில் 800 காளைகள் சீறி பாய்ந்தன. காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கி பரிசுகளை அள்ளி சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த அம்மன்குறிச்சியில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. புதுக்கோட்டை, மதுரை, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன.

காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இறுதியாக 800 காளைகள், 300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. காலை 8.30 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை இலுப்பூர் ஆர்டிஓ கோகுல் சிங் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து களத்தில் பல காளைகள் நின்று விளையாடியது. காளைகள் முட்டி காயமடைந்த வீரர்களுக்கு தயாராக இருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

காளைகளை அடக்கிய வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், கட்டில், பீரோ, டைனிங் டேபிள், சில்வர் பாத்திரங்கள், மின்விசிறி, மிக்சி, குக்கர், கிரைண்டர், வெள்ளி காசு, ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது.

ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான மக்கள் கண்டுகளித்தனர்.

Tags : Ponnamaravathi Jallikatu ,Ammankurichi ,Ponnamarawati ,Jallikat ,Pudukkottai District ,Ammankurichi Maryamman Temple ,Kumbabhishek ,Jallikatu Match ,
× RELATED விவாகரத்து வழக்கில் வழக்கறிஞர்...