தர்மபுரி, பிப். 14: தர்மபுரி மாவட்டம், இண்டூர் அருகே சந்தாரப்பட்டியைச் சேர்ந்தவர் சதீஸ். ஆந்திராவில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள்(26). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மாரியம்மாள் 3வது முறையாக கர்ப்பம் ஆன நிலையில், கடந்த 6ம் தேதி தர்மபுரி தனியார் மருத்துவமனையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. மாரியம்மாள் நேற்று முன்தினம் அதிகாலை, குழந்தைக்கு பால் கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் குழந்தை வாயில் நுரை தள்ளியபடி பேச்சு, மூச்சில்லாமல் இருந்தது. உடனடியாக குழந்தையை இண்டூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
