கரூர், டிச.27: கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, சணப்பிரட்டி போன்ற பகுதிகளில் அரசு மற்றும் தனியார்களுக்கு சொந்தமான ஏராளமான இடங்கள் காலியாக உள்ளன.இந்த இடங்களில் பல ஆண்டுகளாக அகற்றப்படாமல் சீத்த முட்செடிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதுபோன்ற செடிகள் நிலத்தடி நீர் மட்டத்தை வெகுவாக பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. எனவே, இதனை அகற்ற தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இது போல பரவிக்கிடந்த சீத்த முட்செடிகளை அவரவர்களே அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டது. எனவே, இதுபோல திரும்பவும் மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகளை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.