யானைகள், புலிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அரிய வகை செந்நாய்கள் என்ட்ரி : மூணாறு தொழிலாளர்கள் கலக்கம்

மூணாறு : மூணாறில் செந்நாய்களின் நடமாட்டம் இருப்பது தொழிலாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.கேரள மாநிலம், மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் மக்களை காட்டுயானை, புலி, காட்டு எருமை போன்ற வனவிலங்குகள் அச்சுறுத்தி வருகின்றன. அந்த பட்டியலில் தற்போது செந்நாயும் இடம்பிடித்துள்ளது.

நேற்று முன்தினம் கன்னிமலை எஸ்டேட் அருகே செந்நாய்கள் நடமாட்டம் இருப்பதை அப்பகுதியில் உள்ள சிலர் கண்டுள்ளனர். மூணாறு வனத்துறையினர் நேற்று முன்தினம் மாலை குண்டளை எஸ்டேட் கோல்ப் மைதானம் அருகே நடமாட்டத்தை உறுதி செய்யும் வகையில் செந்நாய்களை புகைப்படமும் எடுத்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன் வட்டவடையில் 50க்கும் மேற்பட்ட ஆடுகளை செந்நாய்கள் தாக்கிக் கொன்றது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மற்ற வனவிலங்குகளிடம் சிக்கி தவித்து வரும் நிலையில் தற்போது செந்நாய்களின் நடமாட்டம் தொடங்கியுள்ளதால், தொழிலாளர்கள் மேலும் அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘மூணாறு எஸ்டேட் பகுதியில் தென்பட்டது உசூரி செந்நாய், இந்திய செந்நாய், கிழக்கு ஆசியச் செந்நாய், சீன செந்நாய் அல்லது தெற்கு செந்நாய் என்று அறியப்படுகிறது. இவை அழிந்து வரும் இனத்தை சேர்ந்தவை. பூமியில் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் நீண்ட தூரம் பயணம் செய்து இங்கு வந்திருக்கலாம்’’ என்றனர்.

 

The post யானைகள், புலிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அரிய வகை செந்நாய்கள் என்ட்ரி : மூணாறு தொழிலாளர்கள் கலக்கம் appeared first on Dinakaran.

Related Stories: