அஜ்மீர் தர்காவுக்கு புனித போர்வை வழங்கினார் மோடி

புதுடெல்லி: அஜ்மீர் ஷெரீப் தர்காவுக்கு புனித போர்வை பிரதமர் மோடி நேற்று வழங்கினார். ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற அஜ்மீர் தர்காவில் வருடந்தோறும் உருஸ் எனப்படும் சந்தனக்கூடு விழா நடைபெறும். இந்த விழாவிற்கு தலைவர்கள் புனித போர்வையை வழங்குவது வழக்கம். கடந்த 2015 ம் ஆண்டு அப்போது அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா புனித போர்வையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இஸ்லாமிய சமூக பிரதிநிதிகளை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார்.

அப்போது அஜ்மீர் ஷெரீப் தர்காவில் காஜா மொய்னுதீன் சிஷ்டியின் உருஸ் விழாவின் போது வைக்கப்படும் புனிதமான போர்வையை வழங்கினார். இந்நிகழ்வின் போது சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் தலைவர்கள் உடனிருந்தனர். இதுகுறித்து டிவிட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது: இஸ்லாமிய சமூக பிரதிநிதிகளைச் சந்தித்தேன். எங்கள் உரையாடலின் போது, மரியாதைக்குரிய அஜ்மீர் ஷரீப் தர்ஹாவில் காஜா மொய்னுதீன் சிஷ்டியின் உருஸ் விழாவின் போது வைப்பதற்காகப் புனிதமான போர்வையை நான் வழங்கினேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

The post அஜ்மீர் தர்காவுக்கு புனித போர்வை வழங்கினார் மோடி appeared first on Dinakaran.

Related Stories: