மருத்துவர்கள் தான் மக்களைக் காக்கும் கடவுள்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்,எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து!!

சென்னை : தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், தன்னலம் கருதாது உலகத்து உயிர்களின் உடல்நலனும் உள்ளநலனும் காக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் #DoctorsDay வாழ்த்துகள்! மருத்துவர்கள் நலனுக்கான அனைத்தையும் கழக அரசு செய்துகொடுக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி : உயிர் கொடுத்த பெற்றோர் தெய்வங்கள் என்றால், உயிர் காக்கும் மருத்துவர்களும் தெய்வங்கள் தான்” அத்தகைய போற்றத்தக்க பணிசெய்யும் மருத்துவர்கள் அனைவருக்கும் தேசியமருத்துவர்தினம் நல்வாழ்த்துகள், அல்லும் பகலும் மக்களுக்காக தன்னலம் கருதாமல் மகத்தான மருத்துவ சேவையாற்றும் அனைத்து மருத்துவர்களின் தியாகத்தை இந்நாளில் போற்றி வணங்குகிறேன்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: உடல், மன நலக் குறைபாடுகளை மட்டுமின்றி சமூகக் குறைபாடுகளையும் மருத்துவர்களால் போக்க முடியும்! மருத்துவராக பணியைத் தொடங்கி மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக உயர்ந்த மருத்துவர் பி.சி.இராயின் பிறந்தநாளான இன்று தேசிய மருத்துவர்கள் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மருத்துவத்துறை வளர்ச்சிக்கு பெரும் பங்களித்தவர் பி.சி.இராய். உடல் மற்றும் மனம் சார்ந்த குறைபாடுகளை மட்டுமின்றி சமூகக் கேடுகளையும் அகற்ற வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. அதை மருத்துவர்களால் சாதிக்க முடியும். தங்களை வருத்திக் கொண்டு மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி : மக்களைக் காக்கும் கடவுள்கள் மருத்துவர்கள்; அவர்களை மதிக்க வேண்டியதும், மகிழ்ச்சிப்படுத்த வேண்டியதும் மக்களின் கடமை, அரசின் பொறுப்பு! அன்னையும், தந்தையும் படைக்கும் கடவுள்கள் என்றால், மருத்துவர்கள் தான் மக்களைக் காக்கும் கடவுள்கள் ஆவர். அவர்கள் இல்லாமல் மனித உடலில் ஓர் அணுவும் அசையாது. மக்களைக் காக்கும் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் மருத்துவர்களையும், அவர்களின் உணர்வுகளையும் மக்கள் மதிக்க வேண்டும். அவர்கள் மகிழ்ச்சியாக பணி செய்வதை உறுதிப் படுத்த அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். தேசிய மருத்துவர்கள் நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், சமூகப் பொறுப்புடன் மக்களின் நோய் தீர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post மருத்துவர்கள் தான் மக்களைக் காக்கும் கடவுள்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்,எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து!! appeared first on Dinakaran.

Related Stories: