மன்னார் சுற்றுச்சூழல் சுற்றுலா திட்டத்திற்கு ஜப்பான் நாட்டின் சுற்றுலா விருது

சென்னை: தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம், மன்னார் வளைகுடா கடல் தேசிய பூங்காவின் 21 தீவுகளை உள்ளடக்கியது. உள்ளூர் மக்களின் பங்களிப்பை பயன்படுத்தியும், இப்பகுதியின் ஏராளமான இயற்கை வளங்களைப் பயன்படுத்தியும் சுற்றுச்சூழல் சுற்றுலா தலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மன்னார் சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டம், சுற்றுப்பயணங்களை உருவாக்குவதன் மூலம் உள்ளூர் சமூகத்திற்கு அதன் பொருளாதார பங்களிப்பிற்காக மட்டுமல்லாமல், பிராந்தியத்தின் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் அதன் முயற்சிகளுக்காகவும் அங்கீகரிக்கப்பட்டது.

இத்தகைய உன்னத முயற்சிகளுக்காக ஜப்பான் நாட்டின் 7வது ஜப்பான் சுற்றுலா விருது வழங்கும் விழாவில் செயற்குழுவின் விருதிற்கு இத்திட்டம் தேர்வு செய்யப்பட்டது. ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நேற்று நடந்த 7வது ஜப்பான் சுற்றுலா விருது வழங்கும் விழாவில், ஜப்பான் சுற்றுலா கண்காட்சி செயற்குழுவின் தலைவர் ஹிரோயுகி தகாஹாஷி தமிழ்நாட்டின் மன்னார் சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டத்திற்காக வழங்கிய செயற்குழுவின் விருதினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் மணிவாசன் கலந்து கொண்டார்.

The post மன்னார் சுற்றுச்சூழல் சுற்றுலா திட்டத்திற்கு ஜப்பான் நாட்டின் சுற்றுலா விருது appeared first on Dinakaran.

Related Stories: