குமரியில் கொட்டித்தீர்த்த கனமழையால் வீடுகள் பலத்த சேதம்: பிரதான சாலை நீரில் மூழ்கி சுமார் 100 குடும்பங்கள் தவிப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பிரதான சாலை நீரில் மூழ்கி 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் 2-வது நாளாக தவிக்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த 4 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு இடங்களில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பின. ஒரு சில இடங்களில் மழை நீடிப்பதால் ஆங்காங்கே வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழையில் மூழ்கிய பிரதான சாலையால் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் 2-வது நாளாக தவித்து வருகின்றனர்.

மாவட்டத்தில் 4 நாட்கள் நீடித்த மழையில் 2 வீடுகள் இடிந்து விழுந்து இருப்பதாகவும், மேலும் 44 வீடுகள் சேதமடைந்து இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 3 மின்கம்பங்கள், 11 மரங்கள் முறிந்து விழுந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. வீடு இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்திருந்தார். தொடர்மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக இன்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால் அங்குள்ள முட்டம், குளச்சல், தேங்காய்பட்டினம், சின்னமுட்டம் ஆகிய துறைமுகங்களில் 1,800 விசை படகுகள் 8,000 நாட்டு படகுகள் மற்றும் ஏராளமான கட்டுமரங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 70,000 மீனவர்கள் 4-வது நாளாக இன்றும் வேலையின்றி தவிக்கின்றனர்.

The post குமரியில் கொட்டித்தீர்த்த கனமழையால் வீடுகள் பலத்த சேதம்: பிரதான சாலை நீரில் மூழ்கி சுமார் 100 குடும்பங்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: