திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 12 நாட்களில் ரூ818.18 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. இது கடந்த வருடத்தை விட ரூ9 கோடி அதிகமாகும். கேரளாவில் விஸ்கி, பிராந்தி, ரம் உள்பட இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மது வகைகள் அரசு மதுபான விற்பனைக் கழகத்தின் சில்லறைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 350க்கும் மேற்பட்ட சில்லறை மது விற்பனைக் கடைகள் உள்ளன.
ஓணம், சித்திரை விஷு, கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் கேரளாவில் மது விற்பனை அமோகமாக இருக்கும். இந்த வருடமும் வழக்கம் போல ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் அதிகளவில் மது விற்பனையாகி உள்ளது. செப்டம்பர் 6 முதல் 17ம் தேதி வரை 12 நாட்களில் ரூ818.21 கோடிக்கு மது வகைகள் விற்பனையாகியுள்ளன. கடந்த வருடம் இதே நாட்களில் ரூ809.25 கோடிக்கு விற்பனை நடந்தது.
ஓணம் பண்டிகையின் முந்தைய நாளில் மட்டும் ரூ124 கோடிக்கு மது வகைகள் விற்பனையாகி உள்ளன. இது அரசு மதுபானக் கடைகள் மூலம் நடந்த விற்பனையின் கணக்கு மட்டுமே ஆகும். இது தவிர பார்கள், ராணுவம் மற்றும் போலீஸ் கேண்டீன்களில் நடந்த விற்பனை மற்றும் கள்ளுக்கடைகளில் நடந்த விற்பனையையும் சேர்த்தால் தொகை மேலும் அதிகரிக்கும்.
The post கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு ரூ818 கோடிக்கு மது விற்பனை: கடந்த வருடத்தை விட அதிகம் appeared first on Dinakaran.