கன்னியாகுமரி கடற்கரையில் பரபரப்பு; கடலில் மிதந்து வந்த ஆண் சடலம்: சுற்றுலா பயணிகள் அலறியடித்து கரைக்கு திரும்பினர்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடலில் சுற்றுலா பயணிகள் குளித்து கொண்டிருந்தபோது ஆண் சடலம் மிதந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடற்கரைக்கு வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். அதேபோன்று, இன்று அதிகாலை சூரிய உதயத்தை காண்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதில் பலரும் கடலில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது திரிவேணி சங்கமம் காந்தி மண்டபம் பின்புறம் உள்ள கடல் பகுதியில் ஒரு ஆண் சடலம் மிதந்து வருவதை கண்டு அதிர்ச்சியடைந்து வெளியே வந்தனர்.

உடனடியாக கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உடல் கரை ஒதுங்காததால் போலீசார் கடலில் நீந்தி சென்று மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அந்த நபருக்கு சுமார் 40 வயது இருக்கலாம். யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கடலில் குளிக்கும்போது உயிரிழந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post கன்னியாகுமரி கடற்கரையில் பரபரப்பு; கடலில் மிதந்து வந்த ஆண் சடலம்: சுற்றுலா பயணிகள் அலறியடித்து கரைக்கு திரும்பினர் appeared first on Dinakaran.

Related Stories: