கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பம், டோக்கன் வழங்கும் பணி துவக்கம்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயன் பெற வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கும் பணிகளில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன் பெற தகுதி பெற்ற குடும்பங்களில் 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வரும் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெறும். இரண்டாம் கட்ட முகாம் ஆக.5ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறும்.

ரேஷன் கடை பணியாளர்கள் ஒவ்வொரு ரேஷன் கடை பகுதியில் உள்ள முகாம் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர். பொதுமக்கள் விண்ணப்பங்கள் பெற ரேஷன் கடைக்கு செல்ல தேவையில்லை. ரேஷன் அட்டை இருக்கும் கடை பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பெற்று கொண்ட குடும்பத்தில் உள்ள குடும்ப தலைவி அதனை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு டோக்கனில் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வர வேண்டும்.

விண்ணப்பம் பதிவு செய்யும் போது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்க தேவையில்லை. மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பம் செய்ய வருவாய்துறையில் வருமான சான்று, நில ஆவணங்கள் போன்ற எவ்வித சான்றுகளையும் விண்ணப்பித்து பெற தேவையில்லை.

விண்ணப்ப பதிவு முகாமில் ஒரே நேரத்தில் பலர் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும். விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி மதல் 5.30 மணி வரையும் நடைபெறும்.
முகாம் நடைபெறும் குடியிருப்புகள், தெருக்கள், வார்டு மற்றும் அவற்றுக்கான நாட்கள் குறித்த விவரங்கள் ரேஷன் கடைகளில் தகவல் பலகையாக வைக்கப்படும். விண்ணப்ப பதிவு முகாமிற்கு வரும் விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரி பார்க்கப்படும்.

பயனாளிகளின் விரல் ரேகை பதிவு சரியாக அமையவில்லை எனில், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி வழியாக ஒருமுறை கடவுச்சொல் பெறப்படும். விண்ணப்பதாரரின் ஆதார் அட்டையுடன் தொலைபேசி இணைக்கப்பட்டு இருந்ததால் அந்த கைபேசியை முகாமிற்கு எடுத்து வருவது விண்ணப்ப பதிவை எளிமைப்படுத்தும். குடும்ப தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன் பெற தகுதி பெற்ற குடும்பங்களில் 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். அதாவது 2022 செப்.15 தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்.

குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக கருதப்படுவர். குடும்ப அட்டையில் குடும்ப தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்ப தலைவியாக கருதப்படுவார். குடும்ப அட்டையில் ஆண் குடும்ப தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தால், அவரின் மனைவி குடும்ப தலைவியாக கருதப்படுவார். மனைவியின் பெயர் இல்லாத பட்சத்தில் குடும்பத்தில் உள்ள இதர பெண்களில் ஒருவர் குடும்ப தலைவியாக கருதப்படுவார். ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால் இத்திட்டத்தின் கிழ் பயன்பெற ஒரு நபரை குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்க செய்யலாம்.

திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்ப தலைவிகளாக கருதப்படுவர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறிப்பிடப்பட்டுள்ள நாளன்று விண்ணப்ப பதிவு முகாமிற்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை சரி பார்ப்புக்கு எடுத்து வர வேண்டும்.
இதுகுறித்து சந்தேகங்கள் இருப்பின் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை 0423-2450034, 2450035 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பம், டோக்கன் வழங்கும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: