ஈரான், லெபனானில் போர் பதற்றம்; 13,000 இந்தியர்களின் நிலை என்ன?: வெளியுறவு அமைச்சகம் முன்னெச்சரிக்கை

புதுடெல்லி: ஈரான், லெபனானில் போர் பதற்றம் நீடிப்பதால் அங்கிருக்கும் 13,000 இந்தியர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. கடந்த வாரம் லெபனானில் மூத்த ஹிஸ்புல்லா தளபதியும், ஈரானில் ஹமாஸ் அமைப்பின் உயர்மட்ட அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா ஆகியோர் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டனர். முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த படுகொலைகளுக்கு இஸ்ரேல் ராணுவம் தான் காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதனால் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாவும் ஹமாஸும், இஸ்ரேலுக்கு எதிராக போர் அறிக்கைகளை வெளியிட்டன. அவ்வப்போது இஸ்ரேலுக்கு எதிராக ராக்கெட் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன.

மேலும் இஸ்ரேல் மீதான போர் தொடுக்கப் போவதாக ஈரான் அறிவித்தது. அதனால் மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஈரான் அரசின் ஆதரவு பெற்ற லெபனானை தளமாகக் கொண்ட தீவிரவாதக் குழுவான ஹிஸ்புல்லாவும், இஸ்ரேலுக்கு எதிராக பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது. இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘மேற்கு ஆசியாவின் நிலைமை மிகுந்த கவலை அளிக்கிறது. லெபனானில் சுமார் 3,000 இந்திய குடிமக்கள் உள்ளனர். ஈரானில் 10,000 பேர் உள்ளனர். அங்குள்ள இந்திய தூதரகங்கள் மூலம் எங்களது மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்’ என்றார். இதற்கிடையே அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தங்கள் குடிமக்களை லெபனானை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post ஈரான், லெபனானில் போர் பதற்றம்; 13,000 இந்தியர்களின் நிலை என்ன?: வெளியுறவு அமைச்சகம் முன்னெச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: