1978ம் ஆண்டு கைது செய்யப்பட்ட போது இந்திரா காந்திக்காக விமானத்தை கடத்திய மாஜி எம்எல்ஏ மரணம்: போலி துப்பாக்கியை காட்டிய திகில் பின்னணி

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் பைரியா மாவட்டம் மூன் ஷப்ரா கிராமத்தை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ போலநாத் பாண்டே (71), முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் தீவிர ஆதரவாளராக இருந்தார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், லக்னோவில் உள்ள தனது வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போலநாத் பாண்டே இன்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரை பற்றிய பின்னணி தகவல்கள், தேசிய அரசியல் கவனம் பெற்றுள்ளன.

கடந்த 1978ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட சில மணிநேரங்களில் இந்திரா காந்தி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் போலநாத் பாண்டே தனது நண்பர்களுடன் சேர்ந்து, இந்திரா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து கொல்கத்தாவில் இருந்து டெல்லி நோக்கி 132 பேருடன் புறப்பட்ட விமானத்தை துப்பாக்கி முனையில் கடத்தினார். போலி துப்பாக்கியை கொண்டு விமானத்தை கடத்திய பாண்டே விமானத்தை நேபாளத்திற்கு கொண்டு செல்லும்படி விமானியை மிரட்டினார்.

ஆனால், எரிபொருள் இல்லாததால் விமானம் வாரணாசியிலேயே தரையிறக்கப்பட்டது. இந்திரா காந்தி மற்றும் சஞ்சய் காந்தி ஆகிய இருவர் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்; சிறையில் உள்ள இந்திரா காந்தியை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது மத்தியில் ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தது. உத்தரபிரதேச முதல்வராக ராம் நரேஷ் யாதவ் இருந்தார். பலமணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர், மாநில அரசு உறுதி அளித்த பின்னர் விமானம் புறப்பட்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. கோரிக்கை ஏற்கப்பட்டதால் போலநாத் பாண்டே, அவரது நண்பர் தேவேந்திர பாண்டே இருவரும் சரண் அடைந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விமானத்தை கடத்தியது தொடர்பாக போலநாத் பாண்டே மற்றும் அவரது நண்பர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், 1980ம் ஆண்டு இந்திரா காந்தி மீண்டும் பிரதமர் பதவியில் அமர்ந்தவுடன், போலநாத் உள்ளிட்டோர் மீதான வழக்குகள் கைவிடப்பட்டது. பின்னர் போலநாத்துக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்த அவர், இப்போது பதவி எதிலும் இல்லாத நிலையில் உடல் நலமின்றி இருந்த காலமானார். இருந்தும் அவரது செயல்கள் இன்று வரலாறாக பேசப்பட்டு வருகிறது.

The post 1978ம் ஆண்டு கைது செய்யப்பட்ட போது இந்திரா காந்திக்காக விமானத்தை கடத்திய மாஜி எம்எல்ஏ மரணம்: போலி துப்பாக்கியை காட்டிய திகில் பின்னணி appeared first on Dinakaran.

Related Stories: