நேற்று முளைத்த காளான் இந்திரா காந்தி குறித்து பேசுவதற்கு அண்ணாமலைக்கு தகுதியில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்

சென்னை: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்பி மறைந்த எச்.வசந்தகுமாரின் 4ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் சார்பில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எச்.வசந்தகுமார் படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், கீழானூர் ராஜேந்திரன், மாநில அமைப்பு செயலாளர் ராம் மோகன், மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர், வர்த்தக காங்கிரஸ் பிரிவின் மாநில செயல் தலைவர் எம்.ஜி.ராமசாமி, துணைத் தலைவர் கொண்டல் தாசன், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், வழக்கறிஞர் முத்தழகன், டில்லி பாபு, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் சுமதி அன்பரசு உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.

இதை தொடர்ந்து, செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:
ரயில்வே துறையில் தமிழகத்துக்கு ₹1000 நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். இதை கண்டித்து, மக்களிடம் கையேந்தி ₹1001 ஆக ரயில்வே துறைக்கும், ரயில்வே அமைச்சரின் வங்கி கணக்கிற்கும் திருப்பி அனுப்பும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். அரசியலமைப்பு சட்டத்தை சிதைத்தவர் இந்திரா காந்தி என்று அண்ணாமலை பேசியிருக்கிறார். அவரை பற்றி பேசுவதற்கு மோடிக்கு கூட எந்த தகுதியும் கிடையாது, நேற்று முளைத்த காளான்கள் எல்லாம் அவரைபற்றி பேச தகுதி இல்லை. இந்திரா காந்தி இரும்பு பெண்மணி என்று வாஜ்பாயே பாராட்டி இருக்கிறார். இதை எல்லாம் அண்ணாமலை முதலில் படிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post நேற்று முளைத்த காளான் இந்திரா காந்தி குறித்து பேசுவதற்கு அண்ணாமலைக்கு தகுதியில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: