ஓசூர் அருகே 6 கார்களில் கடத்தி வந்த 1.84 டன் குட்கா பறிமுதல்

*தப்பியோடியவர்கள் குறித்து விசாரணை

ஓசூர் : பெங்களூருவில் இருந்து, 6 கார்களில் கடத்தி வந்த ரூ.12.60 லட்சம் மதிப்புள்ள 1.84 டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கார்களை சாலையோரம் நிறுத்தி விட்டுச் சென்றவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சாலையோரம் 6 கார்கள் கேட்பாரற்ற நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தது. இதை கண்டு சந்தேகமடைந்த போலீசார், அந்த கார்களை சோதனை செய்த போது, 6 கார்களிலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1,844 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.12.60 லட்சம் ஆகும்.

மேலும், காரின் உள்ளே வெளிமாநில மதுபாட்டில்களும் இருந்தது. வடமாநில பதிவெண் கொண்ட இந்த கார்களில், பெங்களூருவில் இருந்த குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த அட்கோ போலீசார், 6 கார்களுடன் குட்கா பொருட்கள், மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து, காரின் பதிவு எண்கள் மற்றும் கர்நாடக மாநில எல்லையில் உள்ள சுங்கச்சாவடியில் பதிவான பாஸ்டேக் பதிவு ஆகியவற்றை பெற்று, குட்கா, மதுபானம் கடத்தலில் ஈடுபட்டவர்கள், கார்களின் உரிமையாளர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஓசூர் அருகே 6 கார்களில் கடத்தி வந்த 1.84 டன் குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: