கர்நாடகா தண்ணீர் தராததால் பயிர்கள் வாடியது டெல்டா விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: காவிரி ஆற்றில் கர்நாடக மாநிலத்தில் இருந்து போதிய அளவு தண்ணீர் பெறப்படாததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 இழப்பீட்டு தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், குறுவை சாகுபடி செய்வதற்கு ஏதுவாக முதல்வர் மு.க.ஸ்டாலினால் 12-6-2023 அன்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது.

ஆனால், காவிரி ஆற்றில் கர்நாடக மாநிலத்தில் இருந்து போதிய அளவு தண்ணீர் தொடர்ந்து பெறப்படாத காரணத்தால், மேட்டூர் அணையில் இருந்து விவசாயத்திற்கு போதிய அளவு தண்ணீர் திறந்து விட இயலாத நிலையில், தற்போது டெல்டா மாவட்டங்களில் ஏறத்தாழ 40 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வாடிய நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது. பயிர் பாதிப்பு விவரங்கள் முறையாக கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 இழப்பீடாக வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (5ம் தேதி) உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post கர்நாடகா தண்ணீர் தராததால் பயிர்கள் வாடியது டெல்டா விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: