சீனாவில் தொடர் மழையால் நிலச்சரிவு; 11 பேர் உயிரிழப்பு: 6 பேர் படுகாயங்களுடன் தப்பினர்

பீஜிங்: சீனாவின் ஹூனான் மாகாணத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.6 பேர் படுகாயமுற்றனர். சீனாவின் மத்திய பகுதியில் ஹூனான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

இந்நிலையில்,ஹெங்க்யாங் நகரின் அருகே உள்ள யுவ்லின் என்ற இடத்தில் நேற்று காலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி சரிந்தது. இதில் 18 பேர் மண்ணில் புதையண்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்பு படையினர் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து 11 உடல்களை மீட்டனர். 6 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். ஒருவரை மட்டும் காணவில்லை. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் மீட்பு படையினர் 240 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடக்கிறது என சீன பத்திரிகை சின்குவா தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக சீனாவில் அடிக்கடி மோசமான வானிலை நிலவி வருகிறது. இந்த மாதத் தொடக்கத்தில் வட, தென்மேற்கு சீனாவில் நிகழ்ந்த திடீர் வெள்ளத்தில் 20 பேர் பலியாயினர். கடந்த மே மாதம் மழையால் தெற்கே உள்ள நெடுஞ்சாலை இடிந்து 48 பேர் உயிரிழந்தனர்.

The post சீனாவில் தொடர் மழையால் நிலச்சரிவு; 11 பேர் உயிரிழப்பு: 6 பேர் படுகாயங்களுடன் தப்பினர் appeared first on Dinakaran.

Related Stories: