பொதுவாக ஆறுகள், தாழ்வான பகுதிகள், ரயில் தண்டவாளங்கள் போன்ற பகுதிகளைக் கடப்பதற்குத்தான் மேம்பாலங்கள் கட்டப்படுவது வழக்கம். ஆனால், சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை மட்டுமே கருத்தில் கொண்டு சென்னை மாநகரில் சாலை சந்திப்பில் முதன் முதலாகக் கட்டப்பட்ட மேம்பாலம் இது. ஜெமினி ஸ்டுடியோ அப்பகுதியில் அமைந்திருந்ததையொட்டி அப்பாலத்தைக் குறிப்பிடும்போது, “ஜெமினி மேம்பாலம்” என்று முதலில் அப்பாலம் கூறப்பட்டது. ஆயினும், கலைஞர், அண்ணாவை போற்றும் தம் நெறிகளில் ஒன்றாக – அன்றைய நிலையில் இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய மேம்பாலமாகத் தாம் கட்டிய இந்தப் பாலத்திற்கு “அண்ணா மேம்பாலம்” எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
சென்னை மாநகருக்கு வெளியூர்களில் இருந்து வருகை தருவோரும், சென்னை மாநகர மக்களும் இந்தப் பாலத்தைக் கடந்து செல்லும்போது வாகன நெரிசல்கள் இன்றி, விரைவாக செல்வதை இன்றும் நாம் காண முடிகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து பொன்விழா காணும் நிலையில் அதனைப் புதுப்பித்திட தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.8.85 கோடி ஒதுக்கீடு செய்தார். மேலும் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2 கோடி பெறப்பட்டது. மொத்தம் ரூ.10 கோடியே 85 லட்சம் செலவில் சென்னை அண்ணா மேம்பாலம் புதுப்பிக்கப்பட்டு வண்ண விளக்குகள் ஒளிர அழகுபடுத்தப்பட்டுள்ளது.
இதில் பாலத்தின் தூண்கள் ஜிஆர்சி பேனல்கள் கொண்டு மறுசீரமைக்கப்பட்டுள்ளன. பாலத்தின் கீழ் அழகூட்டும் வகையில் பசுமையான செடிகள் ஒளிரும் மின்விளக்குகள், மக்கள் நடந்து செல்ல ஏதுவாக நடைபாதை, செயற்கை நீரூற்று ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் திராவிட கட்டிடக் கலையைப் பறைசாற்றும் வகையில் பாலத்தின் முகப்பில் உள்ள தூண்கள், பூங்கா பகுதியில் யாழி சிற்பங்கள், முக்கோண ஸ்தூபிகள், பித்தளைப் பலகையில் அண்ணா பொன்மொழிகள் பொறிக்கப்பட்டுள்ளன. பொன்விழா ஆண்டை முன்னிட்டு புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்டுள்ள அண்ணா மேம்பாலத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
The post பொன்விழா காணும் சென்னை அண்ணா மேம்பாலம் ரூ.10.85 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்: 1973ல் கலைஞரால் திறக்கப்பட்ட முதல் சென்னை மேம்பாலம் appeared first on Dinakaran.