கணவன் பிரிவால் விரக்தி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: 3 முறை காப்பாற்றப்பட்டவர் 4வது முறை உயிரிழந்தார்

வேளச்சேரி: கணவன் பிரிவால் விரக்தியடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே 3 முறை தற்கொலைக்கு முயன்று, காப்பாற்றப்பட்ட நிலையில், 4வது முறை உயிரிழந்தார். பெரும்பாக்கம், எழில் நகரை சேர்ந்தவர் நதியா (39). இவரது கணவர் முருகன், 18 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். வீட்டு வேலை செய்து வந்த இவர், ஆட்டோ டிரைவரான தனது மகன் மதிவாணனுடன் வசித்து வந்தார். கணவன் பிரிவால், கடும் மன உளைச்சலில் இருந்த நதியா, இதற்கு முன், 3 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போதெல்லாம், அதிர்ஷ்டவசமாக மதிவாணன் தனது தாயாரை காப்பாற்றி ஆறுதல் கூறி வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் நதியா தனியாக இருந்துள்ளார். வெளியில் சென்ற மதிவாணன் இரவு வீடு திரும்பியபோது, கதவு உள்பக்கம் தாழிட்டு இருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால், அதிர்ச்சியடைந்த மதிவாணன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது நதியா படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு இறந்து கிடந்தார். மேற்கண்ட பகுதியை சேர்ந்தவர் நந்து. இவர் மயிலாப்பூரில் உள்ள செல்போன் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேகா (21). இவர்களுக்கு திருமணமாகி இரண்டரை வருடங்கள் ஆகிறது.

நந்துவின் தாத்தா அவரது சொந்த ஊரான அரியலூரில் கடந்த 3 தினங்களுக்கு முன் இறந்தார். இதையடுத்து, நந்து அரியலூர் சென்றார். ரேகா துரைப்பாக்கம் கண்ணகி நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். கடந்த 19ம் தேதி தாய் வரலட்சுமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரேகா, ‘‘அக்காவுக்கு மட்டும் அதிகமாக நகை போட்டீர்கள். அவளைத்தான் உங்களுக்கு பிடிக்குது. என்னை உங்களுக்கு பிடிக்கவில்லை,’’ என சண்டை போட்டுவிட்டு, தனது வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், அரியலூர் சென்ற கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு, ‘‘உடனே நீ வீட்டிற்கு வந்துவிடு. நாம் வேறு எங்கேயாவது சென்று விடுவோம்’’ என்று கூறிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.

இதனால், சந்தேகமடைந்த நந்து தனது உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் நேற்று முன்தினம் மாலை நந்து வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார். பலமுறை தட்டியும் கதவை திறக்காததால் பெரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, மின் விசிறியில் ரேகா தூக்கிட்டு இறந்து கிடந்தார். இந்த இரண்டு சடலங்களையும் மீட்ட போலீசார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர். ரேகாவிற்கு திருமணம் ஆகி இரண்டரை ஆண்டுகள் ஆனதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post கணவன் பிரிவால் விரக்தி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: 3 முறை காப்பாற்றப்பட்டவர் 4வது முறை உயிரிழந்தார் appeared first on Dinakaran.

Related Stories: