இன்று முதல் தொடங்குகிறது எஸ்ஐ தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு: அரசு அறிவிப்பு

சென்னை:தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இயக்குநருமான இறையன்பு வெளியிட்ட அறிவிப்பு: தமிழக அரசின் முதன்மைப் பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி அரசுத் துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் பணிபுரிபவர்களுக்கு பல்வேறு நேர்முகப் பயிற்சிகளை அளித்து வருகிறது. பல்வேறு அரசு நிறுவனங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கென இக்கல்லூரி தனது AIM TN என்றழைக்கப்படும் காணொலிப் பாதை மூலம் இணையதள வகுப்புகளை நடத்தி வருகிறது. முதன்முதலாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவலர் பதவிகளுக்கு நடத்திய தேர்வுகளுக்கு 100 பயிற்சி காணொலிகளை தயாரித்து பதிவேற்றம் செய்தது. இந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியின் அடிப்படையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2, 2ஏ முதன்மை தேர்விற்கும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய எம்.டி.எஸ். தேர்விற்கும் பயிற்சி காணொலிகளை பதிவேற்றம் செய்தது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தற்போது காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கு தேர்வினை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இப்போட்டி தேர்விற்கான இலவச இணையதள வகுப்புகளை 10ம் தேதி (இன்று) முதல் தொடங்க உள்ளது. இந்த தேர்விற்கான பாடத்திட்டத்தில் கூறப்பட்டுள்ள தமிழ் தகுதித் தேர்வு (இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்), பொது அறிவு (விஞ்ஞானம், வரலாறு, புவியியல், பொருளாதாரம், இந்திய அரசியல், தற்கால நிகழ்வுகள்), உளவியல் (தருக்கப் பகுப்பாய்வு, எண் பகுப்பாய்வு, தகவல்தொடர்பு திறன், செய்திகளை கையாளும் திறன், அறிவாற்றல் திறன்) என்று அனைத்துப் பிரிவுகளிலும் பாடங்கள் கற்பிக்கப்படும். ‘சாகசம் 60’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இணையதளப் பயிற்சியில் மொத்தம் 180 பயிற்சிக் காணொலிகள் 60 நாட்களில் பதிவேற்றம் செய்யப்படும். இடையிடையே சுமார் 20 மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். மாதிரி தேர்வுகளை நடத்துவதற்கென்றே இந்த கல்லூரி ‘நோக்கம்’ என்று பெயரிடப்பட்டுள்ள மென்செயலி ஒன்றை தயாரித்துள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தேர்வு எழுதிய உடனேயே தங்களது மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.

The post இன்று முதல் தொடங்குகிறது எஸ்ஐ தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு: அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: