யூடியூபர் சங்கரிடம் விடியவிடிய விசாரணை: பெலிக்ஸ் பண்ணையில் கன்டெய்னர் சிக்கியது

திருச்சி: பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த யூடியூபர் சங்கரை திருச்சி சைபர் கிரைம் போலீசார் நேற்று முன்தினம் காவலில் எடுத்து திருச்சி ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் வைத்து விடிய விடிய விசாரித்தனர். காவல் முடிந்து நேற்று மாலை மீண்டும் திருச்சி நீதிமன்றத்தில் சங்கர் ஆஜர்படுத்தப்பட்டு, மீண்டும் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த யூடியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டு மீது கோவை போலீசிலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தடு. இந்த வழக்கில் அவர் நேற்று கோவை நீதிம்னறத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் பெலிக்ஸ் ஜெரால்டை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கன்டெய்னர் சிக்கியது: பெலிக்ஸ் ஜெரால்டின் சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் திருச்சி போலீசார் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் காவல் சரகத்திற்குட்பட்ட திருராமேஸ்வரம் அடுத்த கோட்டகச்சேரி கிராமத்தில் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு சொந்தமான விவசாய பண்ணையில் திருச்சி போலீசார் நேற்றிரவு 8.30 மணியளவில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு ஒரு சொகுசு கன்டெய்னர் இருந்தது.

அதிலும் போலீசார் சோதனை நடத்தினர். பெலிக்சுக்கு சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் அடுத்த தேவதானம் என்ற கிராமம். அங்கு சொந்தமாக பண்ணை வீடு ஒன்றை கட்ட விரும்பிய பெலிக்ஸ் ஜெரால்டு, கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கூத்தாநல்லூர் அடுத்த கோட்டகச்சேரி கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை தனது மனைவி பெயரில் வாங்கினார். அங்கு முற்றிலும் குளிரூட்டப்பட்ட சொகுசு கன்டெய்னர் அறையை அமைத்து உள்ளார். பெலிக்ஸ் அவ்வப்போது இங்கு தங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.

The post யூடியூபர் சங்கரிடம் விடியவிடிய விசாரணை: பெலிக்ஸ் பண்ணையில் கன்டெய்னர் சிக்கியது appeared first on Dinakaran.

Related Stories: