மேற்கு வங்க அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

கொல்கத்தா: மேற்கு வங்க அமைச்சர் ஜோதிப்ரியோ மல்லிக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது ஆட்சியில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிப்ரியோ மல்லிக். இவர் உணவுத்துறை அமைச்சராக இருந்தபோது ரேஷன் கார்டு வழங்குவதில் பல கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சட்ட விரோத பணபரிவர்த்தனை பிரிவின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்தநிலையில் கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் பகுதியில் அமைந்துள்ள மல்லிக் வீட்டிற்கு இன்று அதிகாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மல்லிக் வீட்டில் இல்லை. பின்னர் அவர் வீட்டிற்கு வந்தபிறகு செல்போனை பறிமுதல் செய்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உணவுத்துறை அமைச்சராக மல்லிக் இருந்தபோது அவரது உதவியாளராக இருந்தவர் வீடு உள்பட 8 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக மல்லிக்கிடம் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமலாக்கத்துறையின் இந்த சோதனை அம்மாநில அரசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post மேற்கு வங்க அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.

Related Stories: