முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லும்போது பிரதமரிடம் தமிழகத்திற்கு நீட் தேர்வு விலக்கு குறித்து வலியுறுத்துவார்: அமைச்சர் ரகுபதி தகவல்

சென்னை: முதுநிலை சட்டப்படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களில் 420 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணைகளை சென்னை தலைமை செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று வழங்கினார். பின்னர் அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது: நீட் விலக்கு மசோதா தொடர்பாக, ஜனாதிபதியிடம் இருந்து மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும், மனிதவள மேலாண்மை துறைக்கும் விளக்கம் கேட்டு அனுப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ஒன்றிய உள்துறை அமைச்சகம், தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு 4 முறை கடிதம் அனுப்பியது. அனைத்து கடிதங்களுக்கும் உரிய விளக்கத்துடன் பதிலளித்துள்ளோம். தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா, நீட் தேர்வை அமல்படுத்துவது குறித்த ஒன்றிய அரசின் சட்டத்திற்கு முரணாக இருக்கிறதே என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு, ஒன்றிய அரசின் நீட் சட்டத்தில் எங்களுக்கு முரண்பாடுகள் உள்ளன. அந்த சட்டம் மூலம் எங்களது மாணவர்கள் பாதிக்கப்பட கூடும். நீட் தேர்வு குறித்து எங்களுக்கு முரண்கள் இருப்பதால்தான் நீட் எங்களுக்கு தேவை இல்லை என்று கூறியுள்ளோம்.மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லும்போது பிரதமரிடம், நீட் தேர்வு விலக்கு குறித்து வலியுறுத்துவார். இவ்வாறு அவர் கூறினார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லும்போது பிரதமரிடம் தமிழகத்திற்கு நீட் தேர்வு விலக்கு குறித்து வலியுறுத்துவார்: அமைச்சர் ரகுபதி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: