கொல்கத்தா: வெடிகுண்டு வீச்சு, வேட்பாளர் மீது தாக்குதல், வன்முறையுடன் மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று முடிந்தது. மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு நடந்து வந்தது. நேற்று 35 தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 11,860 வாக்கு சாவடிகளில் நடந்து முடிந்தது. பெலியகட்டா பகுதியில் பாஜ-திரிணாமுல் தொண்டர்களிடையே மோதல் வெடித்தது. ஜொரசங்கோ தொகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தனது வாகனத்தை குறிபார்த்து வெடிகுண்டு வீசப்பட்டதாக பாஜ வேட்பாளர் மீனாதேவி புரோகித் குற்றம் சாட்டினார். இதேபோல் நானூர், மனிக்டலா பகுதியிலும் மோதல்கள் ஏற்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது.