மதுரை ஆதீனத்தின் புகாரை தொடர்ந்து சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை காவல்துறை வெளியிட்டது. அதில் திருச்சி,சென்னை நெடுஞ்சாலையில் மதுரை ஆதீனத்தின் கார் அதிவேகமாக செல்வதும் இடதுபுறத்தில் இருந்து மற்றொரு கார் கட்டுப்பாட்டான வேகத்தில் வந்து கொண்டிருந்ததும் பதிவாகி இருந்தது. மேலும் கட்டுப்பாடான வேகத்தில் வந்த காரை மதுரை ஆதீனத்தின் கார் அதிவேகமாக கடப்பதும் இதை அடுத்து கட்டுப்பாடான வேகத்தில் வந்த காரில் பிரேக் போடப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டதும் அம்பலமானது. உண்மை வெளிவந்த நிலையில் ராஜேந்திரன் என்பவர் சென்னை காவல்ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் மதுரை ஆதீனத்தின் கருத்துக்கள் மாற்று மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்துவதோடு சைவ சமயத்தினரின் உணர்வுகளையும் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகவும்தெரிவித்துள்ளார்.
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்தோடு உண்மைக்கு புறம்பான தகவல்களை மதுரை ஆதினம் தொடர்ந்து பரப்பி வருவதாகவும் புகாரில் குற்றம்சாட்டி இருந்தார். இரு மதத்தினரிடையே கலவரத்தை தூண்டும் வகையிலும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் மதுரை ஆதீனத்தின் கருத்துக்கள் உள்ளதால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். புகார் குறித்து விசாரித்த சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் இரு சமூகங்களுக்கு இடையே பகைமையை உருவாக்கும் வகையில் செயல்படுதல் பொது தீமைக்கும் வழிவகுக்கும் வகையில் தவறான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மதுரை ஆதினம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்கு தொடர்பாக மதுரை ஆதீனத்திற்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
The post இரு மதத்தினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக புகார்: மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.
