தென்னையை தாக்கும் ரூகோஸ் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம்-வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் ஆலோசனை

விராலிமலை : புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னை மரங்களை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை (என்டோமெலஜி) பேராசிரியர் நிவாசன் மற்றும் கல்லூரி முதல்வர் நக்கீரன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. மேலும், தொடர்ந்து வறண்ட வெப்பநிலை நிலவுவதால் இந்த பூச்சியின் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை மேலாண்மை தொழில்நுட்ப முறைகளை கடைபிடித்து வெள்ளை ஈக்களை கட்டுபடுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை முறைகள்:

ஒரு. டிராக்டருடன் இணைக்கப்பட்ட அல்லது தென்னைக்கான பிரத்யேக தெளிப்பான்கள் மூலம் தண்ணீரை வேகமாக இலையின் அடிப்புறத்தில் பீய்ச்சியடித்து கூட்டமாக காணப்படும் வெள்ளை ஈக்களை அழிக்க வேண்டும்.5 அடி 1.5 அடி அகலமுள்ள மஞ்சள் ஒட்டுப்பொறிகளை ஒரு ஏக்கருக்கு 8 எண்கள் என்ற எண்ணிக்கையில் தென்னை மரங்களுக்கு இடையே கட்டி அதன் மேல் விளக்கெண்ணெய் அல்லது பசை தடவி வைத்து வெள்ளை ஈக்களை கவர்தழிக்கலாம்.

இயற்கையில் காணப்படும் என்கார்சியா ஒட்டுண்ணி கூட்டுப் புழுக்களை கண்டறிந்து ஒரு ஏக்கருக்கு 10 ஓலைத் துணுக்குகளை (100 என்கார்சியா கூட்டுப்புழுக்களை) ரூகோஸ் வெள்ளை ஈக்கள் காணப்படும் தோப்புகளில் உள்ள தென்னை மரங்களில் பரவலாக ஓலையில் பொருத்த வேண்டும். என்கார்சியா ஒட்டுண்ணி ஆதார தோப்புகளை ஒவ்வொரு கிராமங்களிலும் கண்டறிந்து அதன் ஓலை துணுக்குகளை மற்ற வெள்ளை ஈ தாக்குதல் உள்ள தோப்புகளில் வைத்திட துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

கிரைசோபெர்லா இரைவிழுங்கி முட்டைகள் ஒரு ஏக்கருக்கு 1000 எண்கள் வீதம் பாதிக்கப்பட்ட தென்னை இலைகளில் ஆங்காங்கே பொருத்த வேண்டும் கிரைசோபெர்லா இரை விழுங்கிகள் தேவைப்படும் விவசாயிகள் மதுரை வேளாண்மைக் கல்லூரி பூச்சியியல் துறையை அணுகி பெற்றிடலாம். கிரைசோபெர்லா 1000 முட்டைகளின் விலை ரூ.300 மட்டுமே. இது மதுரை விநாயகபுரம் (மேலூர் அருகில்) உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் உற்பத்தி மையத்தில் கிடைக்கும். மற்றும் அபெர்டோகிரைசா ஆஸ்டர் என்னும் இரை விழுங்கிகளும் இந்த சுருள் வெள்ளை ஈக்களை கட்டுக்குள் வைக்கிறது. எனவே பூச்சி மருந்து தெளித்தலை தவிர்ப்பது நன்மை பயக்கும்.

ரூகோஸ் வெள்ளை ஈக்கள் இலைகளின் அடிப்புறத்தில் கூட்டமாக இருந்து சாறு உறிஞ்சும் போது தேன் போன்ற திரவத்தை வெளியிடுகிறது. இத்திரவம் கீழுள்ள மட்டைகளில் மேற்புறத்தில் படிந்து கருப்பு நிற பூஞ்சணம் வளர்வதால் இலைகள் கருப்பாக காணப்படும் மற்றும் காய்கள் மீதும் இப்பூஞ்சாணம் படர்ந்து கருமை நிறத்துடன் காய்கள் காணப்படும். இலைகளில் ஒளிச்சேர்க்கை பாதிப்புக்குள்ளாவதில் காய் பிஞ்சுகளும் உதிர்ந்து மகசூல் முழுவதும் பாதிக்கப்படுகிறது.

இப்பூஞ்சானத்தைக் கட்டுபடுத்த 2 சதவீத ஸ்டார்ச் கரைசல் (மைதா) தெளிப்பதன் மூலம் இலைகளின் மேல் உள்ள கரும் பூசணம் காய்ந்து விழுந்து விடும். தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த கண்டிப்பாக எவ்விதமான ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தெளிக்கக்கூடாது. தாக்குதல் மிக அதிகமாக இருந்தால் அசாடிராக்டின் வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லிகளை தெளித்து கட்டுபடுத்தலாம்.மேற்கூறிய ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாடு முறைகளை பயன்படுத்தி தென்னையில் வெள்ளை சுருள் ஈக்களை கட்டுப்படுத்த முடியும் என்று மாதாந்திர வேளாண்மை பணிமனைக் கூட்டத்தில் தெரிவித்தனர்.

The post தென்னையை தாக்கும் ரூகோஸ் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம்-வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: