சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் நடைபெற்று வரும் 135 பணிகள் அடுத்தாண்டு இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்: அமைச்சர் சேகர்பாபு உறுதி

சென்னை: சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி, அகரம், ஜெகந்நாதன் தெருவில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.12 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மறுவாழ்வு மற்றும் இரத்த சுத்திகரிப்பு மையம், ரூ.2 கோடியில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சியின் பன்னோக்கு மையத்தில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் புதிதாக அமையவுள்ள பகிர்ந்த பணியிடமையம், கொளத்தூர், ரெட்ஹில்ஸ் ரோட்டில் ரூ.23.50 கோடியில் கட்டப்பட்டு வரும் நவீன சந்தை மற்றும் புதிய வட்டாட்சியர் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம் மற்றும் சி.எம்.டி.ஏ., சார்பில் பகிர்ந்த பணியிட மையம் என ஒருங்கிணைந்த மக்கள் சேவை மையத்திற்கான இடத்தை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், ‘‘கொளத்தூரில் தனியாக ஒரு வட்டாட்சியர் அலுவலகம் உருவாவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேப்பர் மில்ஸ் சாலையில் வட்டாட்சியர் அலுவலகம், சப்-ரிஜிஸ்டர் அலுவலகம் மற்றும் வணிக வளாகங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் நடைபெற்று வரும் 135 பணிகளையும் டிசம்பர் 2025க்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்’’ என்றார். ஆய்வின்போது மேயர் பிரியா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் அன்சுல் மிஸ்ரா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

The post சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் நடைபெற்று வரும் 135 பணிகள் அடுத்தாண்டு இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்: அமைச்சர் சேகர்பாபு உறுதி appeared first on Dinakaran.

Related Stories: