ஆந்திரா மாநிலத்திற்கு ரூ.6.38 லட்சம் கோடி கடன் உள்ளது ரூ.13 லட்சம் கோடி கடன் வாங்கியதாக சந்திரபாபு நாயுடு பொய்களை பரப்புகிறார்: விஜயவாடாவில் நிதி அமைச்சர் மறுப்பு

திருமலை: ஆந்திர மாநிலத்திற்கு ரூ.6.38 லட்சம் கோடி கடன் உள்ள நிலையில், ரூ.13 லட்சம் கோடி கடன் வாங்கியதாக சந்திரபாபு பொய்களை பரப்புகிறார் என்று விஜயவாடாவில் நிதிஅமைச்சர் புக்கனா ராஜேந்திரநாத் கூறினார். ஆந்திர மாநில நிதி அமைச்சர் புக்கனா ராஜேந்திரநாத் விஜயவாடாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆந்திர மாநில பிரிவினையின் போது மாநிலத்தில் ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 346 கோடி கடன் இருந்தது.

அதைத்தொடர்ந்து, தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு ஐந்தாண்டு காலத்தில் 2019ம் ஆண்டு மே மாதம் வரை ரூ.2 லட்சத்து 71 ஆயிரத்து 797 கோடி பெற்றனர். இதன் மூலம் பழைய கடனுடன் சேர்த்து ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 288 கோடியாக மாநிலத்தின் கடன் உயர்ந்தது. அவ்வாறு தெலுங்குதேசம் ஆட்சியில் மாநில கடன் 22 சதவீதம் அதிகரித்தது. இந்நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் நான்கரை ஆண்டுகளில் ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்து 929 கோடி கடன் பெற்றுள்ளது.

இதனால் 12 சதவீதம் மட்டுமே கடனாக பெறப்பட்டுள்ளது. ஆந்திராவின் நிதி நிலைமை குறித்து எதிர்க்கட்சிகளும் பொய்களை பரப்பி வருகின்றனர். 13 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளதாக சந்திரபாபு நாயுடு பொய் கூறுகிறார். ஆந்திராவின் பொருளாதார நிலையை எந்த அடிப்படையில் பேசுகிறீர்கள்? மொத்தம் மாநிலத்தில் ரூ.6 லட்சத்து 38 ஆயிரத்து 217 கோடி கடன் உள்ளது. சந்திரபாபு நாயுடு ஆட்சியில் 6 சதவீதமாக இருந்த மாநில வருவாய் எங்கள் ஆட்சியில் மத்தியில் கோவிட் பாதிப்பிற்கு மத்தியில் 16.7 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றார்.

The post ஆந்திரா மாநிலத்திற்கு ரூ.6.38 லட்சம் கோடி கடன் உள்ளது ரூ.13 லட்சம் கோடி கடன் வாங்கியதாக சந்திரபாபு நாயுடு பொய்களை பரப்புகிறார்: விஜயவாடாவில் நிதி அமைச்சர் மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: