கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு இளைஞர்களின் எழுச்சி பயணத்திற்கான லோகோவை வெளியிட்டார். வருங்கால தேர்தல்களில் இளைஞர் காங்கிரசுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்க வேண்டும். அதேபோல, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட மற்றும் மாநில பொறுப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இளைஞர்கள் எழுச்சி சுற்றுப்பயணத்தை மாவட்ட ரீதியாக மேற்கொள்வது உள்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து, செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: காங்கிரஸ் ஆட்சியில் ரயில்வே துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், பாஜ அரசு ரயில்வே துறைக்கான பட்ஜெட்டை எடுத்துவிட்டது. ரயில் விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை ஒன்றிய அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. ரயில்வே பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தவில்லை என்று சி.ஏ.ஜி. அறிக்கை கூறுகிறது.
பாஜவுடன் இணைந்துள்ள பாமக சமூகநீதியை பற்றி பேசலாமா என்று யோசிக்க வேண்டும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாதது குறித்து பாஜவிடம் ராமதாஸ் கேட்பாரா?. அதிமுக கொடுத்த 10.5 சதவீத இடஒதுக்கீட்டை பாமக முறையாக பெற்றிருக்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காகவே இடஒதுக்கீட்டை அதிமுக அளித்தது. அதிமுகவும், பாமகவும் அரசியல் நாடகமாடிவிட்டு முதல்வரை, ராமதாஸ் குறை சொல்வது நியாயம் ஆகாது. உச்ச நீதிமன்றம் இந்த இடஒதுக்கீட்டை எந்த அடிப்படையில் கொடுத்தார்கள் என்று கேட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலையம் விவகாரத்தில் மக்களுடன் நான் இருக்கிறேன். இன்றைய தினம் வளர்ச்சியை தடை செய்ய முடியாது. பரந்தூர் விமான நிலைய இடம் கடந்த கால அதிமுக ஆட்சியில் தான் பரிந்துரை செய்யப்பட்டது. மக்களை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுப்பதாக தமிழக அரசும் தெரிவித்துள்ளது. எந்த காலத்திலும் மக்களுக்கு விரோதமாக தமிழக அரசு செயல்படாது. இவ்வாறு அவர் கூறினார்.
The post பாஜவுடன் இணைந்த பிறகு சமூகநீதி பற்றி பேசலாமா என பாமக யோசிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.