வங்கி கணக்குகளில் நேற்றே ரூ.1000 டெபாசிட் ஆனது 1 கோடி பெண்கள் மகிழ்ச்சி: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: வீட்டு வேலையை உழைப்பாக கருதி அதனை அங்கீகரிக்கும் வகையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார். இதன் அடையாளமாக பயனாளிகளுக்கு அவர் ஏடிஎம் கார்டையும் வழங்குகிறார். இத்திட்டத்தில் மூலம் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் பேர் பயனடைகின்றனர். அதே நேரத்தில் வங்கிகள் மூலம் நேற்று முதல் பணம் டெபாசிட் செய்யப்பட்டு வருவதால் பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பெண்களின் வீட்டு வேலையை உழைப்பாக கருதி அதனை அங்கீகரிக்கும் வகையில் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பெண்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த இந்த திட்டத்துக்கு, ‘‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்’’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார். இத்திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவித்தார். இதற்காக தமிழக பட்ஜெட்டில் ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும் இத்திட்டத்திற்காக ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமார் ஒரு கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை, அவர்களது வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன் விநியோகம், கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் உரிய பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பங்களை வழங்கினர். தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 21ம் தேதி விண்ணப்ப பதிவு முகாம் தொடங்கியது.

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விண்ணப்ப பதிவு முகாமை தொடங்கி வைத்தார். 2 கட்டமாக முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்ப பதிவு நடந்தது. தொடர்ந்து ஆகஸ்ட் 23ம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்து சரிபார்க்கும் பணிகள் மாநிலம் முழுவதும் நடந்தது. ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் நேரடியாக சென்று கள ஆய்வு செய்யப்பட்டது. தகுதியானவர்கள் யாரும் விடுபட்டு விடாமல் கவனமுடன் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த திட்டத்திற்கு மொத்தம் 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்தன.

ஆய்வில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது. ஒரே நேரத்தில் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வங்கிகள் மூலமாக பணம் வழங்குவது என்பது முடியாத காரியம். ஒரே நேரத்தில் வங்கிகள் மூலமாக பணம் அனுப்பினால் தொழில்நுட்ப கோளாறுகள் அதிக அளவில் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளது. இது போன்ற குளறுபடிகளை தவிர்க்கும் வகையில் அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்தது. முதல் கட்டமாக விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குகளுக்கு கடந்த இரு தினங்களாக ஒரு ரூபாய் மற்றும் மெசேஜ் அனுப்பி வைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் அண்ணா பிறந்தநாளான இன்று கலைஞர் உரிமை திட்டம் தொடக்க விழா நடக்கிறது. காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் இன்று காலை 10 மணிக்கு இந்த விழா நடக்கிறது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் உரிமை திட்டத்தை தொடங்கி வைக்கிறார். மேலும் இத்திட்டத்தின் அடையாளமாக பயனாளிகளுக்கு ஏடிஎம் கார்டையும் அவர் வழங்க உள்ளார். தொடர்ந்து அவர் சிறப்புரையாற்ற உள்ளனர். இதேபோல மாவட்டங்களில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொங்கி வைக்கின்றனர்.

இந்நிலையில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் நேற்று பிற்பகல் முதல் படிப்படியாக ரூ.1000 செலுத்தப்பட்டு வருகிறது. திட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ள நிலையில் நேற்றே வங்கி கணக்கில் பணம் வந்ததால் குடும்ப தலைவிகள் ரொம்ப மகிழ்ச்சி அடைந்தனர். இன்று காலை 10 மணிக்குள் அனைவரின் வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை இன்று காலை தொடங்கி வைக்கும் வேளையில் பயனாளிகள் அனைவரின் வங்கி கணக்கிலும் ரூ.1000 சென்றடைய வேண்டும் என்று உன்னத நோக்கத்துடன் அரசு இந்த அதிரடி நடவடிக்கை எடுத்தது அனைத்து தரப்பு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் விண்ணப்பித்து ரூ.1000 கிடைக்காதவர்களுக்கு, கோரிக்கைகள் ஏன் ஏற்கப்படவில்லை என்ற காரணத்தை தெரிவித்து அவர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும். அதன் பிறகு அவர்கள் மறுபடியும் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் தகுதி பெறுபவர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும்.இவ்வாறு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மகளிர் திட்டங்களில் புதிய அத்தியாயம்: முதல்வர் டிவிட்
“கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவு: எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கில் இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் முன்னோடியாக, தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், நாளை(இன்று) பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் தொடங்கப்பட்டு, ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத்தலைவிகள் இனி மாதம்தோறும் பயன்பெற உள்ளனர். மகளிர் நலத் திட்டங்களில் புது அத்தியாயமான இத்திட்டம் குறித்தும், மாநிலத்தின் நிதிநிலையை மேம்படுத்துவதில் நமது அரசு கொண்டுள்ள உறுதியை வெளிப்படுத்தியுள்ளது.

The post வங்கி கணக்குகளில் நேற்றே ரூ.1000 டெபாசிட் ஆனது 1 கோடி பெண்கள் மகிழ்ச்சி: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: