சுபமுகூர்த்த தினமான இன்று முன்பதிவு வில்லைகள் கூடுதலாக ஒதுக்கீடு: பத்திரப்பதிவு துறை தகவல்

சென்னை: ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான இன்று அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பத்திரப்பதிவுக்காக கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தற்போது ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான இன்று (ஜூலை 12ம் தேதி) அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எனவே இன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகள் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் கூடுதலாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post சுபமுகூர்த்த தினமான இன்று முன்பதிவு வில்லைகள் கூடுதலாக ஒதுக்கீடு: பத்திரப்பதிவு துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: