ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: பாஜ பிரமுகர் கைது

திருப்பூர்: திருப்பூர் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட ஸ்ரீநகர் பகுதியில் தனியார் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. கடந்த 20ம் தேதி இரவு அந்த மையத்துக்குள் புகுந்த மர்ம நபர் ஏடிஎம் இயந்திரத்தை ஹாலோ பிளாக் கல்லால் உடைக்க முயன்றார். நீண்ட நேரம் போராடியும் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். பின்னர் பணம் எடுக்க சென்ற நபர்கள் ஏடிஎம் இயந்திரம் உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

மேலும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியின் அடிப்படையில் போலீசார் அந்த மர்ம நபரை தேடி வந்தனர். அப்போது இச்சம்பவத்தில் ஈடுபட்டது அவிநாசி கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் (54) என்பதும், இவர் பாஜ திருப்பூர் மாவட்ட பிரசார அணி செயலாளர் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக முரண்பட்ட தேதியுடன் திருப்பூர் மாவட்ட பாஜ சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே பாஜ மாநில தலைவர் அண்ணாமலையுடன், முருகானந்தம் இருக்கும் படம் வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: பாஜ பிரமுகர் கைது appeared first on Dinakaran.

Related Stories: