தற்போது இவை அனைத்தும் முடிந்து கடந்த மாதம் நாணயம் வெளியிடுவதற்கான அனுமதி கடிதத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கையெழுத்திட்டுள்ளார். முன்னாள் தமிழக முதல்வரான மு.கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் ரூ.100 நினைவு நாணயம், அதன் அமைப்பு, உள்ளடக்கம் விலை ஆகியவை முடிவு செய்யப்பட்டது. இதன்படி இந்த நாணயத்தை அச்சிடுவதற்கு கடந்த ஜூலை 12ம் தேதி மத்திய அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து கலைஞரின் நினைவு நாணயத்திற்கான மாதிரி வரைபடம் தமிழக அரசிடம் இருந்து பெறப்பட்டது. இதை வடிவமைக்கும் பணியை ஒன்றிய நிதியமைச்சகம் செய்து வந்தது. நாணயத்தை, ஒன்றிய நிதி அமைச்சகத்தின் உத்தரவின்படி இந்திய ரிசர்வ் வங்கி அச்சடித்து வெளியிடுகிறது.
இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ‘டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி’ என்ற பெயருடன், ‘தமிழ் வெல்லும்’ என்ற தமிழ் வாசகம் அவரது நினைவு நாணயத்தில் இடம்பெற உள்ளது. தற்போது கலைஞரின் நூற்றாண்டு நாணயம் வெளியிடுவதற்கான நிகழ்ச்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்பாட்டின் பேரில் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 17 அல்லது 18ம் தேதி சென்னை, கலைவாணர் அரங்கில் விழா நடைபெறுகிறது. ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கலைஞரின் 100 ரூபாய் நாணயத்தை வெளியிட உள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞரின் நாணயத்தை பெற்றுக் கொள்கிறார். விழாவில், திமுக தலைவர்கள் மட்டுமல்லாது கூட்டணி கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். விழா அழைப்பிதழ் கொடுக்கும் பணிகளை தமிழக அரசு அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
The post தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று கலைஞர் நூற்றாண்டு நாணயம்: சென்னையில் 18ம் தேதி வெளியீடு appeared first on Dinakaran.