அதிமுக சட்ட விதி திருத்தங்களை ஏற்பது பற்றி 10 நாட்களுக்குள் முடிவு: டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்.. பழனிசாமி வழக்கு முடித்துவைப்பு..!!

டெல்லி: அதிமுக சட்ட விதி திருத்தங்களை ஏற்பது பற்றி 10 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என்று டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிமுகவின் பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தற்போது செயல்பட்டு வருகிறார். முன்னதாக ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி நியமிக்கப்பட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனிடையே, அதிமுக பொதுச் செயலாளராக தன்னை அங்கீரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் புருசந்திராகுமர் கவ்ரவ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜூலை 11ம் தேதி நடந்த தீர்மானங்களை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த தகவலும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டும் அதையும் அங்கீகரிக்காமல் தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே காலதாமதம் செய்கிறது. எனவே கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு வழக்கு விசாரணையை விரைந்து விசாரித்து தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

ஓபிஎஸ் தரப்பு வாதிடுகையில், பொதுச்செயலாளர் நியமனம், மூல வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதாவது, கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. தேர்தல் ஆணையம் இதுவரை முடிவெடுக்கவில்லை. எனவே எடப்பாடி பழனிசாமி மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் தேர்தல் ஆணையம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், அதிமுக சட்ட விதி திருத்தங்களை ஏற்பது பற்றி 10 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு அவகாசம் வழங்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது. தேர்தல் ஆணையம் முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் கேட்டிருந்த நிலையில் அவகாசம் வழங்கி வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதிமுக சட்ட விதிகளை திருத்தியதை ஆணையம் அங்கீகரிப்பதை பொறுத்தே பழனிசாமி பொதுசெயலாளர் ஆவாரா என்பது தெரியவரும்.

The post அதிமுக சட்ட விதி திருத்தங்களை ஏற்பது பற்றி 10 நாட்களுக்குள் முடிவு: டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்.. பழனிசாமி வழக்கு முடித்துவைப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: