8 பேர் உயிரிழந்த விவகாரம் பல் மருத்துவர் 3 நாளில் விளக்கம் அளிக்க நோட்டீஸ்

வாணியம்பாடி: வாணியம்பாடி தனியார் பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர் 3 நாளில் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் கடந்த 2023ம் ஆண்டு சிகிச்சை பெற்ற 8 பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததாக புகார்கள் எழுந்தது. தொடர்ந்து, தமிழ்நாடு பொதுசுகாதார இயக்குனரகம் மற்றும் வேலூர் தனியார் மருத்துவமனை இணைந்து நடத்திய ஆய்வில், ஒருமுறை பயன்படுத்திய மருத்துவ கருவியை சுகாதாரமற்ற முறையில் மீண்டும் நோயாளிகளுக்கு பயன்படுத்தியதால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு 8 உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக ஆய்வு அறிக்கை வெளியானது.

தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ஞான மீனாட்சி நேற்று முன்தினம் தனியார் பல் மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அதனடிப்படையில், கடந்த 2023ம் ஆண்டு செயல்பட்டு வந்த கிளினிக், தற்போது வேறு பெயரில் நடைபெற்று வருவதற்கான ஆவணங்கள் குறித்தும், 8 பேர் சிகிச்சை மேற்கொண்ட விவரங்கள் குறித்து விளக்கம் கேட்டு பல் மருத்துவர் அறிவரசனுக்கு நேற்று தபால் மூலம் நோட்டீஸ் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் அனுப்பினார். மேலும், 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறும், தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 8 பேர் உயிரிழந்த விவகாரம் பல் மருத்துவர் 3 நாளில் விளக்கம் அளிக்க நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: