ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் சார்பில் பரிசு கூப்பன் விழுந்திருப்பதாக பணம் பறிக்கும் புதிய மோசடி

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சைபர் கிரைம் குற்றவாளிகள் நாள்தோறும் தங்களது ஏமாற்று வேலைகளை மாற்றிக் கொண்டு புது யுக்திகளை கையாண்டு மோசடியில் ஈடுபடுகின்றனர். தற்போது அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் 9வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பரிசு போட்டி நடத்தியதாகவும், அதில் நீங்கள் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு கடிதம் பொதுமக்களின் வீட்டுக்கு அனுப்பப்படுகிறது.

அமேசான் லச்சினையோடு இருக்கும் அந்த கடிதத்தில் ஸ்மார்ட் டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மிஷின், ஸ்மார்ட் போன், லேப்டாப், ரொக்க பணம் ஆகியவை பரிசாக விழுந்திருப்பதாக குறிப்பிட்டு இருக்கும். மேலும் அந்த கடிதத்துடன் ஒரு ஸ்கிராட்ச் கூப்பன் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த கூப்பனை ஸ்கிராட்ச் செய்து அதில் உள்ள குறியீடுகளை, அதில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கும். அதை நம்பி பொதுமக்கள் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளும்போது எதிர்முனையில் பேசும் நபர், பரிசு பொருட்களை அனுப்புவதற்கு ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு வரிகள் செலுத்த வேண்டும் என்று கூறுவார்கள். இதை நம்பிய பொதுமக்கள் ஆன்லைன் மூலமாக பணத்தை செலுத்துவார்கள். பணத்தை பெறும் நபர், அதன்பிறகு செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு தொடர்பை துண்டித்து விடுவார். இதன் பின்னரே பணம் செலுத்திய பொதுமக்களுக்கு தங்களிடம் பணம் மோசடி செய்யப் பட்டது தெரியவரும். எனவே இது போன்ற மோசடிகளில் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும், இருக்க வேண்டும்.

The post ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் சார்பில் பரிசு கூப்பன் விழுந்திருப்பதாக பணம் பறிக்கும் புதிய மோசடி appeared first on Dinakaran.

Related Stories: