மேல்மலையனூர் அருகே சோகம் கார் விபத்தில் மாணவன் உள்பட 2 பேர் பரிதாப பலி

மேல்மலையனூர், டிச. 3: மேல்மலையனூர் அருகே நின்றிருந்த கார் மீது மற்றொரு கார் மோதி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள். செங்கல்பட்டு வஉசி நகரை சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி மற்றும் மகன், மகள் நேற்று காரில் மேல்மலையனூர் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றனர். அங்கு சாமி கும்பிட்டுவிட்டு மீண்டும் வீட்டுக்கு காரில் திரும்பினார். விழுப்புரம் மாவட்டம் நீலாம்பூண்டி கிராமம் அருகே வந்தபோது அங்குள்ள ஒரு பஞ்சர் கடையில் காரை நிறுத்தி டயருக்கு காற்று அடித்தனர். கடை உரிமையாளர் கரீம் டயருக்கு காற்று பிடித்துக் கொண்டிருந்தார். கார் அருகே சுந்தரின் மகன் கல்லூரி மாணவன் அருள்ராஜ் நின்றிருந்தார். அப்போது சாலையில் வேகமாக வந்த  மற்றொரு கார் இவர்கள் மீது மோதியது. இதில் கரீம் (65), அருள்ராஜ் (21) ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். காரும் நொறுங்கியது. காரில் அமர்ந்திருந்த சுந்தரின் மனைவி, மகள் ேலசான காயமடைந்தனர்.இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வளத்தி போலீசார் 2 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செஞ்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.கார் விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: