பெரம்பலூர், டிச. 2: பெரம்பலூர், வேப்பந்தட்டை அரசு கல்லூரிகளில் இரண்டாமாண்டு முதுகலை பட்ட வகுப்புகளுக்காக கல்லூரிகள் நடப்பாண்டுக்கு முதல்முறையாக இன்று திறக்கப்படுகின்றன.உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த 144 ஊரடங்கு தடை உத்தரவு காரணமாக வரலாற்றில் இல்லாதவாறு ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் திறக்கப்படும் கல்லூரிகள், நடப்பாண்டு இதுவரை திறக்கப்படாமலேயே உள்ளது.இந்நிலையில் தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவின்படி இன்று (டிச. 2) முதல் முதுகலை பட்ட வகுப்புகளின் இறுதியாண்டு மாணவர்களான 2ம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவியருக்காக மட்டும் கல்லூரிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் துறையூர் சாலையில் குரும்பலூரில் இயங்கி வரும் பெரம்பலூர் அரசு கல்லூரி, ஆத்தூர் சாலையில் வேப்பந்தட்டை- கிருஷ்ணாபுரம் இடையே இயங்கி வரும் வேப்பந்தட்டை அரசு கல்லூரி ஆகியவற்றில் முதுகலை இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கான 2020- 2021ம் கல்வி ஆண்டுக்கான பட்ட வகுப்புகள் இன்று துவங்கி நடக்கிறது.